Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
306
Reaction score
217
Points
63
அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.

அத்தியாயம் - 5

"என்னாச்சி இதழி ரொம்ப இளைச்சி போயிருக்க. முன்னாடி இருந்ததுக்கும் இப்போ இருக்குறதுக்கும் பயங்கர டிஃப்ரெண்ட் இருக்கே. ஒருவேளை என்ன விட்டு பிரிஞ்சி இருந்ததுல ஏக்கம் அதிகமாகி உடம்பு குறைஞ்சிடுச்சோ" குறும்பாக சொல்லியபடி அவள் பக்கத்தில் அமர குனிந்த தலை நிமிர்ந்தாள் இல்லை.

"ஏய் வந்ததுல இருந்து நானே பேசிட்டு இருக்கேன் நீ என்ன அமைதியாவே இருக்க. ஆமா நீ ஏதோ என்கிட்ட சொல்லணும்னு சொன்னியே இப்ப சொல்லு" அவள் கரத்தை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொள்ள தயக்கமாக அவனை தலை தூக்கிப் பார்த்தவள் சொல்ல நினைப்பதை வாய் திறந்து சொல்ல முடியாமல் தொண்டை அடைக்க தடுமாறிப் போனாள்.

"என்னாச்சி இதழி, சே வாட் யூ வாண்ட் டூ சே (Say what you want to say)" ஆர்வமாக உற்சாகப்படுத்த, "அது இருக்கட்டும் திலீப் அதான் உன் வீட்டு பிரச்சனை எல்லாம் சால்வ் ஆகிடுச்சே, இப்ப நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் உன் அம்மாகிட்ட பேசு திலீப்" என்றாள் உறுதியாக.

"கண்டிப்பா இதழி அதுக்காக தானே வந்திருக்கேன். ஆனா அதுக்கு முன்னாடி நிறைய விஷயம் உன்கிட்ட பேசி கிளியர் பண்ணனும். அது எல்லாத்துக்கும் உனக்கு ஓகேன்னா நம்ம தாராளமா கல்யாணம் பண்ணிக்கலாம்" பொடி வைத்து பேசியவனை கண்கள் இடுங்க பார்த்தாள் யமுனா.

"என்ன திலீப் சொல்ற, என்கிட்ட பேசி கிளியர் பண்ணிக்கிற அளவுக்கு அப்படி என்ன பெரிய விஷயம் இருக்கு." குழம்பியவளாக அவன் முகத்தையே பார்த்தாள்.

"ரொம்ப பெரிய விஷயம் தான் ஆனா ஒரே நாளுலே எல்லாத்தையும் எப்படி பேச முடியும். மிச்சம் மீதிய மெதுவா பேசிக்கலாம் நீ போய் ரெஸ்ட் எடு நானும் வீட்டுக்கு போயிட்டு முதல்ல அம்மாவ பாக்குறேன். ஒரு வாரம் கழிச்சி வந்து உன்னை கூட்டிட்டு போறேன் சரியா" அவள் கையில் அழுத்தம் கொடுத்து சொன்னவன் சிறிய அணைப்போடு விலகி அங்கிருந்து சென்றவனை கண்ணீர் மறைக்கக் கண்டாள்.

திலீப் சென்றதில் இருந்து ஒரு போன் இல்லை மெசேஜ் இல்லை. என்னானதோ ஏதானதோ என கவலையாக முகம் பொலிவின்றி அடிக்கடி போனை பார்ப்பதும், திலீப்க்கு அழைப்பதும் குறுஞ்செய்தி அனுப்புவதுமாக இருந்த யமுனாவை கவனித்த சரித்ரா முதலில் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.

ஆனால் திலீப் சொல்லி சென்ற நாட்கள் கடந்தும் அவனிடமிருந்து எந்த தகவலும் இல்லாமல் போகவே பயத்தில் தனிமையில் கலங்கிப் போனவளின் நிலையை புரிந்துக் கொண்டு ஆதரவாக அணைத்துக் கொண்டாள் சரித்ரா.

"இதழ் உனக்கு மட்டும் ஏன்தா இப்படிலாம் நடக்குதோ தெரியல. இந்த காதல் எத்தனை பெரிய வலி கமிட்மெண்ட்ஸ்னு உன்னை பாத்து தான் தெரிஞ்சிகிட்டேன். உன் லவ்க்காக நீ எவ்வளவோ சேக்ரிஃபைஸ் பண்ணிருக்க. ஆனா..." என்று தயங்கி பேச்சை நிறுத்தியவளை கண்ணீரோடு ஏறிட்டுப் பார்த்தாள் யமுனா.

"சொல்றேன்னு தப்பா நினைக்காத டி, கல்யாணம் ஆன பொண்ணுங்களே ஏன் நம்ம மாமியார் வீட்டுக்கு செய்யணும்னு யோசிச்சி விலகி போற இந்த காலத்துல, எந்த பொண்ணு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே தன் காதலன் குடும்பத்துக்காக மாடா உழைச்சி அதுல இருந்து ஒத்த பைசா தனக்குன்னு கூட எடுத்துக்காம முழுசா சம்பாதிச்சிக் கொடுப்பா.

நானும் இதைப்பத்தி எல்லாம் முன்னாடியே உன்கிட்ட சொல்லி இருக்கேன் சம்பாதிக்கிற பணத்துல கொஞ்சமாச்சும் உன் அக்கவுண்ட்ல போட்டு வைனு கேட்டா தானே! எப்பப்பாரு திலீப் வீட்டுக்கு கொடுக்கணும் திலீப் வீட்டுக்கு கொடுக்கணும்னு வாங்குற பணத்தை முழுசா தூக்கி அங்க கொடுத்துட்டு உக்காந்திருக்க.

நீதான் அவங்க வீட்டுக்கு பணம் கொடுக்குறேன்னு அவங்க எல்லார்க்கும் நல்லாவே தெரியும், ஆனா திலீப் உன்னை விட்டுட்டு துபாய் போன இந்த ஒன்றை வருஷத்துல அவங்க வீட்ல இருந்து யாராவது உன்னை பாக்க என்னைக்காவது வந்திருக்காங்களா? இல்ல திலீப் தான் ஆகட்டும் போன் பண்றதை தவிர வேற எதாவது உனக்காக செஞ்சி இருக்காரா? நான் பாத்த வரைக்கும் கூட ஒன்னுமே இல்ல. இதுல நாயா பேயா கஷ்டப்படுறது எல்லாமே இங்க நீதான் இதழ்.

இதெல்லாம் ஏன் சொல்றேன்னா, இத்தனை வருஷமா நீ அவங்களுக்கு சம்பாதிச்சி கொடுத்தது எல்லாம் போதும் நல்லதோ கெட்டதோ இனிமே நீ உனக்குன்னு தனியா சேவிங்ஸ் பண்ணி வச்சிக்கோ அதுதான் என்னைக்கும் நல்லது"

ஏனோ சரித்ராக்கு யமுனா, திலீப் வீட்டிற்காக கஷ்டப்பட்டு சம்பாதித்துக் கொடுப்பது எதுவும் பிடித்தம் இல்லை. அவளும் பலமுறை இலைமறைகாயாக சொல்லிப் பார்த்து விட்டாள், ஆனாலும் அவர்கள் பாவம் இதுவும் தன்கடமை தானே என்று இவள் சொல்லி செல்லும் போது சலிப்பாக தோன்றும் அவளுக்கு.
சரித்ராவின் பேச்சைக் கேட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தாள் யமுனா.

"நீ சொல்றது சரிதான் சரித். ஆனா உனக்கு தெரியாது, என் வீட்ல டார்ச்சர் தாங்காம நான் வீட்டை விட்டு திலீப் வீட்டுக்கு ஓடி வந்த பிறகு என்ன விரட்டி அடிக்காம அன்பா அக்கறையா அரவணைச்சி எந்த ஒரு எதிர்ப்பும் காட்டாம ஏத்துகிட்டு, 'இனிமே உனக்கு நான் இருக்கேன் கண்ணுனு' என்ன சொந்த பொண்ணு மாதிரி நல்லா பாத்துக்கிட்டவங்க திலீப் அம்மாவும் அப்பாவும்.

நானும் அவங்க வீட்ல இருந்த வரைக்கும் நிம்மதியா இருந்தேன். பெத்த அம்மா அப்பாவே என்ன நம்பாம திலீப் கூட தப்பு பண்ணிட்டு வரியா? எத்தன புள்ளைய கணக்கில்லாம கலைச்ச? இவன் மட்டும் தானா இல்ல இன்னும் பல பேர் கூட கொட்டம் அடிச்சிட்டு வரியானு, சொந்த பந்தம் எல்லாரையும் கூட்டி அவங்க முன்னாடி தினம் தினம் அவமானப்பட்டு, அசிங்கப்பட்டு நரகம் போல ஒரு வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருந்த எனக்கு திலீப் வீடு சொர்கமா தெரிஞ்சிது.

பெத்தவங்க எம்மேல அன்பா அக்கறையா இருந்திருந்தா நான் ஏன் காதல் செஞ்சிருக்கப் போறேன். என்னவோ என்ன சின்ன வயசுல இருந்தே வேண்டாத பிள்ளைய போலதான் வளத்து படிக்க வச்சி இருந்தாங்க. எனக்கு நினைவு தெரிஞ்சதுல இருந்து எம்மேல யாருமே அன்பா இருந்ததில்ல. சின்ன சின்ன விஷயத்துக்கு கூட சொந்தங்களை கூட்டி அவங்க முன்னாடி தான் அடிப்பாங்க திட்டுவாங்க. அத்தனை பேரும் நான் அழுது நிக்கும் போது கேலி பண்ணி சிரிக்கும் போது அப்படியே கூனிக்குறுகிடுவேன் தெரியுமா.

அந்த சமயத்துல என்கூட அன்பா பழகின திலீப்ப பிடிச்சிது காதல் வந்துச்சி. உன் வீட்ல ஓவரா உன்னை பேசி டார்ச்சர் பண்ணா யோசிக்காம என் வீட்டுக்கு வந்திடு நான் உன்னை பாத்துக்குறேன்னு நம்பிக்கை கொடுத்தான் நானும் துணிஞ்சி வந்தேன். ஆனா வந்த கொஞ்ச நாளுல, திலீப் அம்மாக்கு ஹார்ட் பிராப்லம் இருக்குறது தெரிய வந்துச்சி கூடவே இரண்டு கிட்னியும் ஃபெயிலியர். எல்லார் தலையிலும் இடி விழுந்த நிலை.

திலீப் மிடில் கிளாஸ் பையன் வீட்டுக்கும் ஒரே பையன் அக்காவை கட்டிக் கொடுத்த கடனே தலைக்கு மேல இருக்கும் போது, ஆண்டிக்கு ஆப்ரேசன் செய்ய 50 லட்சம் தாண்டி பணம் தேவை, ரொம்பவே நெருக்கடி ஆச்சி அந்த நேரம்.

திலீப் அக்கா ஊர்ல இருந்து வந்து நான் வந்த நேரம் தான் எங்க அம்மாக்கு இப்படிலாம் ஆச்சினு ஒரே புலம்பல். என்னால அங்க இருக்க முடியாத சூழ்நிலை. அத்தனை கஷ்டத்துலயும் அவன் அக்காகிட்ட சண்டைப் போட்டு எனக்காக தனி பிளாட் பாத்து தங்க வச்சான் திலீப்.

அவனும் அவன் அப்பா மாமா எல்லாரும் எங்கெங்கோ பணத்தை புரட்டி எப்படியோ ஆண்டிக்கு ஆப்ரேசன நல்லபடியா முடிச்சிட்டாங்க, ஆனா லட்சக்கணக்குல கடன் வட்டி மேல வட்டிப் போட்டு கழுத்தை நெருக்குச்சி. எனக்குள்ளும் குற்றவுணர்ச்சி ஒருவேளை நான் வந்த நேரம் தான் சரி இல்லாம நல்லா இருந்த குடும்பம் இப்படி ஆகிடுச்சோன்னு.

நானும் ஒரு பக்கம் கிடைக்கிற வேலைக்கு ஓடி என்னால முடிஞ்ச பணத்தை திலீப்க்கு கொடுப்பேன், முதல்ல தயங்கினான் பிறகு நெருக்கடி தாங்காம அரைமனசா வாங்கிட்டு போவான். ஆனா அது எந்த மூலைக்கு பத்தும்.

அப்புறம் தான் வேற வழி இல்லாம திலீப் துபாய் போனான். அங்கேயும் பெருசா சொல்லிக்கிற மாதிரி சம்பாத்தியம் இல்ல. நானும் என் பங்குக்கு சில கம்பனிகளுக்கு வேலைக்கு போவேன் திலீப் வேண்டான்னு சொல்லியும் கேக்காம. திலீப் ஊருக்கு போன கொஞ்ச மாசத்துல அவன் அப்பாக்கும் நெஞ்சுவலி வந்து பெரிய இக்கட்டான சூழ்நிலைய உருவாக்குச்சி.

அவருக்கும் ஆப்ரேசன் பண்ண அங்க இங்க கடன் வாங்க வேண்டிய நிலை வந்திடுச்சு. அவன் அப்பாக்கு ஆப்ரேசன் செய்யும் போது கூட திலீப் ஊருக்கு வந்து அவன் அப்பாவ பாக்க முடியாத நிலைமை.

வாங்கின கடனை அடைக்கவே துபாய் போயிட்டு வரமுடியாம கஷ்ட்டப்பட்டான். அதான் நானும் என்னால முடிஞ்ச உதவிய அவனுக்கு செய்யணும்னு ஓடி, கடைசில இந்த ரெசார்ட்ல அதிக சம்பளம் கொடுக்குறதா என் பிரண்ட் ஒருத்தி சொல்லவே இங்க வந்து ஜாயின் பண்ணேன். இப்ப சொல்லு டி என்னால ஒரு குடும்பமே கஷ்டப்படும் போது நான் மட்டும் எப்படி சுயநலமா என்ன பத்தி யோசிக்க முடியும்..."

தன் விளக்கத்தை சுருக்கமாக சொல்லி மூக்கை உறுஞ்ச, அவளின் நிலையை எண்ணி பரிதாபம் கொண்டாலும் பெரிதாக உதட்டை சுழித்துக் கொண்டாள் சரித்ரா.
"நான் பிறந்ததால தான் என் அப்பாக்கு ஆக்சிடென்ட் ஆகி எங்க குடும்பத்துக்கு தரித்திரம் புடிச்சிதுன்னு எங்க அம்மா அடிக்கடி திட்டுவாங்க. அதுனால தான் என்கிட்ட யாருமே பாசமா இருக்க மாட்டாங்க. அப்போல்லாம் நான் நிறைய அதை நினைச்சி அழுது வருத்தப்பட்டு இருக்கேன்.

ஆனா அதுவே தொடர்ந்து திலீப் வீட்லயும் அடுத்தடுத்து நடந்தது என் மனசுல நெருடலை ஏற்படுத்துச்சி சரித், ஒருவேளை என் அம்மா சொல்றமாறி என்னோட தரித்திரம் தான் இதுக்கெல்லாம் காரணமோனு." என்றவளின் வாயில் ரெண்டு தட்டு தட்டி முறைத்து வைத்தாள் சரித்ரா.

"சரியான லூசு டி நீ.. உன் கற்பனை வளத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சி. இந்த காலத்துல கூட இப்படியெல்லாம் முட்டாள்த்தனமா யோசிப்பாங்களா என்ன! ஆக்சிடென்ட், இதய நோய், கிட்னி ஃபெயிலியர், ஹார்ட் அட்டாக், தலைவலி இதெல்லாம் ஹையா நான் வர போறேன்னு தம்பட்டம் அடிச்சிட்டு வர விஷயமா.. எல்லாமே தற்செயலா நடக்குற விஷயம்.

உன் அப்பாக்கு கவனக்குறைவால ஆக்சிடென்ட் ஆச்சின்னா அதுக்கு பிறந்த குழந்தை நீ என்ன பண்ணுவ. திலீப் அம்மா அவங்க உடம்பை சரியா கவனிக்காம விட்டதால அவங்க ஒரு ஹார்ட் பேஷண்ட் அப்படின்ற விஷயமே யாருக்கும் தெரியாம போச்சி, கூடவே கிட்னி அழுகி இருந்திருக்கு.

அந்த கவலை கடன் கவலைன்னு திலீப் அப்பா நெஞ்சை பிடிச்சிட்டு படுத்துட்டாரு. இதுக்கெல்லாம் நீயா பொறுப்பு. நீ அந்த வீட்டுக்கு போகலைன்னாலும் இதெல்லாம் அடுத்தடுத்து கண்டிப்பா நடந்திருக்கும் இதழ்..."

"இதையெல்லாம் நினைச்சி சும்மா லூசு மாதிரி உளறாம இனிமே உனக்கான வாழ்க்கைய யாரை பத்தியும் கவலை படாம தைரியமா வாழப் பாரு. திலீப் வரும் போது வரட்டும் நீ வா" என அதட்டி உருட்டி அவளை இழுத்து சென்றாள் சரித்ரா.

ஆனாலும் யமுனாவின் புத்திக்கு அவையெல்லாம் உரைக்க வேண்டுமே! திலீப் ஏன் இன்னும் வந்து தன்னை அழைத்து செல்லவில்லை என்று காதல் மனம் தவிக்க, சரித்ராக்கு தெரியாமல் இரண்டு நாட்கள் லீவ் அப்ளை செய்துவிட்டு இரவோடு இரவாக காட்டு ரெசார்ட்டில் இருந்து புறப்பட்டு திலீப் ஊரான காரைக்குடிக்கு வந்திருந்தாள்.

வந்த இடத்தில் அவளுக்காக காத்திருக்கும் அடுக்கடுக்கான அதிர்ச்சிகளை எல்லாம் தாங்கிக் கொள்ளுமா பெண்ணவளின் பலவீனமான இளகிய மனம்?

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 5
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top