Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖
Administrator
Staff member
Messages
228
Reaction score
212
Points
63
அத்தியாயம் - 28

மூன்று நாட்கள் கடந்திருந்தது கவி குணமாக. எப்போதும் இல்லை என்றாலும் இப்டி ஏதாவது ஒரு நேரம் மாதவிலக்கின் போது காய்ச்சலும் வந்து விடும் அவளுக்கு. அப்போதெல்லாம் உடனிருந்து பார்த்துக் கொள்வதும் ஸ்வாதி தான்.

இன்று அவளுக்கு உடல் நலம் தேறி இருக்கவே, "கவி நான் ஆபிஸ் போறேன் நீ இன்னைக்கு ஒருநாள் நல்லா ரெஸ்ட் எடு, நாளைல இருந்து வேலைக்கு போகலாம்.." என்றபடி ஸ்வாதி தயாராகிக் கொண்டிருக்க, வேலை என்றதும் அதுவரை சற்று தெளிவாக இருந்த கவி முகம் குழப்பதில் ஆழ்ந்தது.

"என்ன டி பதில் சொல்லாம அமைதியா இருக்க.." அவள் முகத்தை உற்று நோக்கினாள் ஸ்வாதி.

"ஸ்.ஸ்வாதி.." என அவளை தயக்கமாக அழைத்த கவி, "ந்.நான் இனி வேலைக்கு போகல டி.." என்றவளாக தலை குனிந்துக்கொள்ள, ஆழமாக அவளை பார்த்த ஸ்வாதி,

"என்ன பிரச்சன கவி என்கிட்ட கூட சொல்ல முடியாத அளவுக்கு, நானும் கேக்கணும்னு தான் நெனச்சிட்டு இருக்கேன், சரி உன் உடம்பு கொஞ்சம் சரியாகட்டுனு பொறுமையா இருந்தேன்..

அன்னைக்கு கை காலெல்லாம் சிவந்து வீங்கி வரும் போதே ஏதோ என் மனசுக்கு சரியா படல, உண்மைய சொல்லு.." ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தமாக கேட்டிட, ஏனோ ஆத்வியைப் பற்றி நல்லதாகவும் கூற முடியவில்லை, அவன் செய்ததை எல்லாம் தோழியிடம் சொல்லவும் முடியவில்லை.

மனதில் என்னவென வெளியே சொல்லமுடியாத ஏதோ ஒரு நெருடல், ஆனால் திரும்ப ஆத்வியை பார்த்து அவன் விஷமாய் கொட்டும் வார்த்தைகளும், முள்ளாய் குத்தும் நெருக்கத்தையும் ஏற்றுக் கொள்ளதான் மனமும் உடலும் மறுத்தது.

"ஏய்.. கவி என்ன உக்காந்துகிட்டே தூங்குறியா.." ஸ்வாதி அவளை உளுக்க, ஹான்.. என விழித்த கவி, இவளிடம் என்ன கூறி சமாளிப்பது என்று குழம்பியவளாக,

"நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல டி, தினமு காலைல அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து அவசரவரசமா கெளம்பி போறது எனக்கு தூக்கம் பத்தமாட்டுது அதான்.." வாய்க்கு வந்ததை அடித்து விட, கண்கள் சுருக்கி நம்பாமல் பார்த்தாள்.

"நீ எப்டி உன் வேலைய நேசிக்கிற பொண்ணுனு எனக்கு தெரியாதா.. இப்பலாம் என்கிட்டவே பொய் சொல்ல தொடங்கிட்டல்ல கவி, அந்த அளவுக்கு உனக்கு நான் அந்நியமா போய்ட்டேனா.." என்றாள் வேதனை பிரதிபலிக்கும் விழிகளோடு.

அதில் பதறி கண் கலங்கிப் போன கவி, சட்டென அவள் வாய் மூடி, "ப்ளீஸ் ஸ்வாதி இப்டி பெரிய வார்த்தை எல்லாம் பேசி என் மனச நோகடிக்காத, பொய் சொல்ற அளவுக்கெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல டி.. எனக்கு இன்னும் அங்க சரியா கம்ஃபோர்ட்டபிள் ஆகல, அதான் அப்டி சொன்னேன்.. நீயா எதுவும் நெனச்சி இப்டிலாம் பேசாத ஸ்வாதி.." கவி வருத்தமாக கூற, அவள் சொல்வதை இதற்கு மேலும் நம்பாமல் இருப்பாளா என்ன!

"சரி சரி இதை அப்டியே ப்ரீயா விட்ரு கவி, ஆனா இப்டி நீ தொட்ட வேலையை பாதில விடலாமா.. நீ கேர்டேக் எடுத்து இருக்கவர் ஒரு கோமா பேஷன்ட், அவரு நல்லபடியா குணமாகி வருவார்னு அங்க உள்ளவங்க எல்லாம் ரொம்ப நம்பிக்கையோட இருக்குறதா, நீ தானே சொன்ன..

இந்த டைம்ல போய் நீ வேலைய விட்டு நின்னா, அவங்க மனசொடஞ்சி போக மாட்டாங்களா.." என்றதும் மித்ரா ஆருவின் நினைவு வந்து கவியின் மனதை வாட்டியது.

அவள் முகம் யோசனையில் சுருங்குவதை பார்த்தவள், "சரி உனக்கு பிடிக்கலனா வேலைய விட்ரு கவிழ் நீ வேலைக்கு போய் தான் ஆகணும்னு எந்த கட்டாயமும் இல்ல, போறதும் போகாதும் உன் முடிவு.. ஆனா எந்த முடிவா இருந்தாலும் யோசிச்சி முடிவெடு கவி.." அறிவுறை வழங்கிய ஸ்வாதி, அலுவலகம் சென்று விட்டாள்.

குழம்பிய குட்டையில் கல் எறிந்த கதையாக, கலங்கிப் போய் அமர்ந்திருந்தாள் கவி. ஆத்வி ஒருவனைத் தவிர மற்ற அனைவரையும் அவளுக்கு மிகவும் பிடித்து தான் இருந்தது. அதுவும் மித்ரா ஆதியை சொல்லவே வேண்டாம்.

இப்போது அவள் அங்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என்ற முடிவை கூட, அவன் ஒருவனுக்காக அரைமனதுடன் எடுத்த முடிவு தானே தவிர, முழுமனதாக எடுத்த முடிவில்லையே!

மெத்தையில் அசைவின்றி படுத்திருக்கும் விக்ரமின் முகம் கண்முன் தோன்ற, "இல்ல இல்ல நான் என் வேலைய யாருக்கும் பயந்து பாதியோட விடமாட்டேன்.. இனிமே அவன் என்கிட்ட எல்லைமீறி நடந்துகிட்டா கைய கால உடைச்சி ஒரு வழி பண்ணிடனும், ஆனா எப்டி முடியும்! அவன் தான் பாக்க முரட்டு தடியனா இருக்கானே.. என்னால தனியா என்ன செய்ய முடியும்.." மீண்டும் அவனை நினைத்து கலக்கம் ஒட்டிக் கொண்டது.

இங்கோ ஆத்வி, தலையில் இரு கைகளை தாங்கி பிடித்து, மண்டை சூடேறிப் போன நிலையில் பைத்தியம் பிடிக்காத குறையாக அமர்ந்திருந்தான். எப்படி யோசனை செய்து பார்த்தும் நடந்த எதையும் அவனால் ஜீரனித்துக் கொள்ளவே முடியவில்லை. இதனிடையில் கவியை வேறு பார்த்து மூன்று தினங்கள் முடிந்திருந்தது.

தலை வலி வின்வின்னென்று தெறிக்க கண்களை இறுக மூடியவன் நினைவில் நேற்று பொழுது நடந்த காட்சிகள் வந்து நிற்க, கண்ணில் மிளகாய் தூளை வாரி இறைத்தததை போன்ற உணர்வு.

"வணக்கம் சார்.." என்றபடி தொழிலதிபர் சிவலிங்கம் அவர் மனைவி குடும்பத்தோடு ஆதியின் இல்லத்திற்கு வருகை தர, மரியாதை நிமித்தமாக வணக்கம் கூறிய ஆதி,

"என்ன விஷயமா என் வீட்டுக்கு குடும்பத்தோடு வந்துருக்கீங்க லிங்கம்.." நேரடியாக விடயத்திற்கு வந்தான்.

பணிப்பெண் ஒருத்தி வந்தவர்களுக்கு குளிர்பானம் பருகக் கொடுக்க, சிரித்த முகமாக எடுத்துக் கொண்டவர்கள், "நீங்க ஸ்ட்ரைட் ஃபார்வர்டுனு எனக்கு நல்லா தெரியும் ஆதி, பிகாஸ் நாம எல்லாம் இத்தனை வருஷமா பிசினஸ் பீல்ட்ல ஒண்ணா இருக்கோம் இது கூட தெரிஞ்சிக்காட்டி எப்டி..

இனிவே நான் நேரா விஷயத்துக்கே வரேன், எனக்கு ஒரு பொண்ணு இருக்குறது உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன், பேர் ஹரிதா அவளும் ரெண்டு வருஷமா வெளிநாட்டுல இருந்துட்டு, இப்போ கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி இந்தியா தான் வந்தா.."

லிங்கம் சொல்ல ஆதியிடம் இருந்து எந்த ஒரு ரியாக்ஷனும் இல்லை. மேலே சொல் என்பது போல கூர் பார்வை மட்டுமே அவர்கள் மீது. மீண்டும் தொடர்ந்தார் லிங்கம்.

"வெளிநாடு போன கொஞ்ச நாளுலே உங்க பையன் ஆத்விய பாத்துருக்கா என்பொண்ணு, தம்பிய பாத்ததும் புடிச்சி போச்சி போல, கட்டினா அவரை தான் கட்டிப்பேன்னு பிடிவாதமா இருக்கா.. உங்க பதில் என்னனு சொன்னீங்கனா " என்று கடைசி வரியை மட்டும் நீட்டி முழக்கினார் அவர்.

"வெல், சொல்ல வந்தத சொல்லியாச்சா லிங்கம், அப்புறம் என்ன.." என்றான் கேலியாக.

இவர்கள் பேசியதை கேட்டபடி படியிறங்கி வந்த மித்ராவையும், அவள் பின்னே வந்த மகள் மருமகன் பேத்தி என்று அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவர்.

"அஞ்சி வருஷத்துக்கு முன்னாடி என் பையனுக்கு தான் உங்க பொண்ணு ஆருத்ராவ தர மாட்டேன்னு ஒரே மூச்சா சொல்லிடீங்க, இப்ப என் பொண்ணுக்கு உங்க பையன மாப்பிளை கேட்டு வந்திருக்கேன்.. மறுப்பு சொல்லாம சம்மந்தம் பேசி நம்ம ரெண்டு குடும்பமும் ஒன்னு சேரலாம்னு சொல்ல வந்தேன்.." எனும்போது தான் அலுவலகம் விட்டு ஆத்வியும் வந்து சேர்த்தான். அவர் பேசியை கேட்டுக் கொண்டே.

மகனை ஒரு பார்வை பார்த்த ஆதி. "ஆத்வி இவர் பொண்ண கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா" வந்ததும் வராததுமாக கம்பீரம் குறையாத தந்தையின் கேள்விக்கு தெளிவான பதிலாக, "இல்லை" என்று இரும்புக் குரல் முழங்கியது.

"என் பையன் சொன்னது கேட்டு இருக்கும்னு நினைக்கிறேன் சோ" என்று வாயில் பக்கம் அவன் வெளியே போ என்று சொல்லாமல் கை நீட்ட, வந்த ஆத்திரத்தில் பற்களைக் கடித்த லிங்கம், ஆதியிடம் நேரடியாக பகையை வளர்த்துக் கொள்ள முடியாமல்,

"தம்பி மட்டும் அது முடிவ சொல்லிட்டா போதுமா ஆதி, என் பொண்ணு வயித்துல வளறுற உங்க வீட்டு வாரிசை அப்புறம் என்ன பண்றது" என்றதும் பெண்கள் இருவரும் தான் அதிர்ந்து போயினரே தவிர, ஆண்களின் பார்வை எல்லாம் லிங்கத்தையும் அவர் குடும்பத்தையும் உறுத்து பார்த்தது.

"என்ன சொல்றீங்க எங்க வீட்டு வாரிசு உங்க பொண்ணு வயித்துலயா" மித்ரா தான் படபடப்பு குறையாமல் கேட்டது. அவளின் அதிர்ச்சியை உணர்ந்த ஆதி, மித்ராவை முறைத்து பார்க்க.

"ஆமாம்மா, என் பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடியே இப்போ அஞ்சி மாசம் முழுகாம இருக்கா உங்க பையனோட குழந்தைய சுமந்துகிட்டு" என்றதும் நெஞ்சில் கை வைத்து திகைத்துப் போக,

"ஆருஉஉஉ.." ஆதியின் சத்தமானக் குரல் ஒலித்து, "அம்மாவ உள்ள கூட்டிட்டு போ.." என்றான் பார்வையை லிங்கத்தின் மீது அழுத்தமாக பதித்து.

"அம்மா உள்ள வா.." என அவளை கை பிடித்து அழைக்க,

"இரு ஆரு அவங்க ஏதேதோ சொல்றாங்க அது உண்மை இல்ல, என் பையன நான் அப்படி வளக்கல.. அ.அவங்க பொய் தானே சொல்றாங்க.." மகளின் கை பிடித்து நெஞ்சடைக்க மித்ரா கேட்டிட,

"ம்மா.. அதெல்லாம் ஒன்னும் இல்ல, ஆத்வி அப்டிப்பட்டவன் இல்ல, நீ முதல்ல வா போலாம்.." அவளை சமாதானம் பேசி அழைத்து செல்ல முனைய, லிங்கத்தின் குடும்பம் மித்ராவை ஒருமாதிரி பார்த்து வைத்தது.

ஆருவுடன் செல்ல மறுத்த மித்ரா, உணர்ச்சியற்ற மகனின் முகத்தை பரிதவிப்பாக கண்டு, "எனக்கு உன்மேல முழு நம்பிக்கை இருக்கு ஆத்வி, என் பையன் இப்டி ஒரு காரியத்தை நிச்சயமா செஞ்சிருக்க மாட்டான்..

இருந்தாலும் அம்மாக்காக ஒரு வார்த்தை இவங்க சொல்றதெல்லாம் பொய் தான் மாம்னு வாய் திறந்து சொல்லுபா.." மகனிடம் ஓடி அவன் கைபிடித்து கண்ணீரோடு கேட்டதற்கு, ஆத்வி பதில் சொல்லும் முன்பே,

"கூடிய சீக்கிரம் உங்க பொண்ணுக்கும் என் பையனுக்கும் கல்யாணம்" ஆதியின் கணீர் குரலில், இப்போது மொத்த குடும்பமும் அதிர்ச்சியானது.

ஆனால் லிங்கத்தின் குடும்பத்தினருக்கு அளவற்ற மகிழ்ச்சியே!

"அப்போ நாங்க கொண்டு வந்த பூ பழத்தை வாங்கிகிட்டு உறுதி படுத்திகிட்டா ரொம்ப சந்தோஷம்" என்றதும் ஆதியே எழுந்து அவர்கள் கொடுத்த தாம்பூலத்தை பெற்றுக் கொள்ள, மித்ராவின் பார்வை முதல் முறையாக கணவனின் மீது கோவமாக படிந்தது.

ஆத்வியோ வெளியாட்கள் முன்னிலையில் தந்தையின் பேச்சிக்கு மறுப்பு கூறாமல் அமைதியாக இருக்க, இருவரையும் மாறி மாறி பார்த்த மித்ரா அதீதக் கோபத்தில் உள்ளே சென்றாள். தாயின் பின்னோடு ஆருவும் தன்யாவை சென்று விட, ஆண்கள் மூவரும் தனித்து நின்றனர்.

"எதுக்கு டாட் நான் பேசுறதுக்கு முன்னாடி இப்டி பண்ணீங்க.." ஆத்வியின் கோபக் குரலில் அமைதி காத்தான் ஆதி. அஜயோ, அமைதியாக கைகட்டி இருவரையும் வேடிக்கைப் பார்த்தான்.

"உங்க அமைதிக்கு அர்த்தம் என்னை நீங்க நம்பலைன்னு எடுத்துக்கலாமா டாட்.." அப்போதும் பதில் பேசவில்லை ஆதி.

"ஓகே ஆல்ரைட் பெத்த மகனை நம்பாம யாரோ சொன்னதை வச்சி நீங்களா எப்ப முடிவெடுத்தீங்களோ, அப்பவே உங்களுக்கும் எனக்குமான உறவு முடிஞ்சி போச்சி.. என் லைஃப எப்டி சேவ் பண்ணிக்கணும்னு எனக்கு தெரியும்"

கடுங்கோபத்தில் குதித்தவன் அங்கிருக்கும் பொருட்களை எல்லாம் வேகமாக தட்டி உடைத்து விட்டு, அறைக்கு வந்தவன் தான். விடிந்தும் கூட வெளியே எங்கும் செல்ல விருப்பம் இல்லாமல், அதிக படியான டென்ஷனில் தலைவலிக்கப் படுத்துக் கிடந்தான்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 28
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top