Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

அத்தியாயம் 41

Administrator
Staff member
Messages
300
Reaction score
215
Points
63
அத்தியாயம் - 41

டெல்லிக்கு எதற்கு வந்தோம் ஏன் வந்தோம் என்ற விடயமே மறந்து விட்டனர் போலும் இரு ஆடவர்களும். வந்த சீப் கெஸ்டும் சிறப்பாக தன் வேலையை முடித்து விட்டு புறப்பட்டு விட இந்த தடியன்ங்கள் தான் இங்கேயே பாயை விரித்து படுத்து விட்டனர்.

ஒருவன் புது காதலியை எப்படி உஷார் செய்வது என்ற தீவிர யோசனையில் இருக்க, இன்னொருவன் பழைய காதலியை எப்படி வழிக்கு கொண்டு வருவது என தெரியாது கண்முழி பிதுங்கிப் போனான்.

விடுமுறை தினம், காலையில் அவளுக்கும் மகளுக்கும் மட்டும் தோசையோடு முடித்துக் கொண்டு வீட்டை கூட்டி சுத்தம் செய்தவள் குழந்தையை தலைக்கு குளிக்க வைத்து ஃபேன் காற்றில் குட்டிநீண்ட கூந்தல் காயட்டும் என மதிய வேளைக்கு அவள் உணவு தயார் செய்துக் கொண்டு இருக்க விதவிதமான மணங்கள் நாசியில் வீசி ரொம்பவே சோதனைக்கு உள்ளாக்கியது அவன் வயிற்றை. அதுவும் மோகியும் பிள்ளையும் வீட்டில் இருக்கும் போது அவர்களை விட்டு தனியாக வெளியே சென்று உண்டு வரவும் மனமில்லை நேரம் செல்ல செல்ல தான் பசியின் வீரியம் அதிகமானது வெட்கத்தை விட்டு வாய் திறந்தும் கேட்டு விட்டான் 'ஒரே ஒரு தோசையாவது குடு டி ரொம்ப பசிக்குது' என.

பழைய மோகியா அவள் 'அச்சோ பசிக்குதா விஷ்வா இதோ நானே ஊட்டி விடுறேன்' என்று பரிதவித்து அக்கறை காட்ட. அவனால் வதைப்பட்ட மனம் அவனிடத்தில் கல்நெஞ்சாக மாறி இலகு தன்மையை இழந்து விட்டது. பசி என்று வாய் திறந்து சொல்லியும் பரிதாபபட தோன்றவில்லை மாறாக முன்பு அவன் அவள் கொடுத்த உணவை உதாசீனம் செய்தது, அவன் ஒவ்வொரு முறையும் பேசுகையில், ஒருபெண்ணோடு இருந்துகொண்டு அவன் தன்னை பழி வாங்கி விட்டதாக வக்கிரமாக உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையும் ஆங்கார குரலும் தான் மீண்டும் மீண்டும் செவியில் எதிரொலித்து அவன் இழைத்த துரோகமே நெஞ்சை கனத்து முறைப்போடு கடந்து விட்டாள்.

அவளின் எண்ணப் போக்கை அப்பட்டமாக அவனாலும் உணர முடிந்தது இருந்தும் ஆசை மனைவியின் சிற்றிடை அசைந்தாடி அவள் வேலை செய்யும் அழகு பழைய நினைவுகளை நினைவூட்டி தன்னவளின் அருகாமை கிடைத்தும் நெருங்க முடியாத கொடிய நிலையில் தவித்து 'காதல் கொண்டு ஆசையோடு பார்த்தாலே நெருப்பா எரிக்கிறா. இதுல எங்க அவளை கரெக்ட் பண்ணி நெருங்கி முத்தமிட்டு கொஞ்சி தப்பு தப்பா செஞ்சி வேதிக்கு துணையா அடுத்த குழந்தைக்கு எப்டி ரெடி பண்றது' அவனது அடிமனம் பெருத்த யோசனையில் ஆழ்ந்தாலும், குழந்தையோடு பேசிக்கொண்டிருந்தவனின் கொத்தித்தின்னும் பார்வை மோகப்பெண்ணின் மீதுதான்.

பார்வையப் பாரு கண்ணுல கட்டைய சொருகனு. இன்னும் எதுக்கு என் வீட்ல வந்து உக்காந்துகிட்டு என் குழந்தைய மயக்கிட்டு இருக்கான். அவன் வீட்டுக்கு கிளம்பி போக வேண்டியது தானே, சரியான பிராடு மோசக்காரன். வேதி கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல முடியாத அளவுக்கு அப்பா சொப்பானு அவ மைண்ட மொத்தமா மாட்டிட்டான். செய்றதை எல்லாம் செஞ்சிட்டு மன்னிப்பு கேட்டா உடனே எல்லாத்தையும் மறந்து இவனுக்கு நான் வாடா என் தங்கமேனு சேவை செய்யணுமா? தடிமாடு வெளிய போயிட்டு சாப்பிடு இல்லாட்டி பட்டினி கிட ஆனா என் கையாள பச்சை தண்ணி கூட தர மாட்டேனே இவனுக்கு. உதட்டசைவில் வசவுப்பாடி ஆடவனின் கண் பார்க்கும் இடமெல்லாம் அசௌகரியத்தை உண்டாக்க சேலையை சரிசெய்தவாறே குழம்பு கொதித்த வாணலியில் அப்படியே கை வைத்து விட்டாள்.

ஸ்ஸ்.. அம்மா.. வலியில் மெல்லமாக முணுகியது பாம்புகாதனுக்கு சரியாக கேட்டு விட்டதே, 'ஏய்.. மோகி பாத்து கவனமா செய்ய மாட்டியாடி' சிவந்த விரலை கண்டு சட்டென வாய்க்குள் அதக்கிக் கொண்டதும் வலிஎரிச்சலை தாண்டி அவனது எச்சிலின் சிலுசிலுப்பில் மயிர்கூர்கள் மேலெழும்பி அருவருப்பை உண்டாக்க வெடுக்கென கரத்தை இழுத்து நீரில் கழுவிக் கொண்டவளை, இயலாமையோடு நின்று பார்க்க மட்டுமே முடிந்தது அவனால்.

அதேநேரம் கனகா வந்து வேதிதாவை தூக்கி சென்று விட, மீண்டும் அவளிடம் வந்தான் விஷ்வரூபன்.

மோகி.. என் முகத்தை கூட பாக்க மாட்ற என்ன பாக்க பிடிக்காத அளவுக்கு வெறுத்திட்டியா டி, ப்ளீஸ் ஒருமுறை மன்னிக்கக் கூடாதா மோகிமா.. அவள் பின்னாலே பாவமாக சுற்றி வந்தவனை கேலியாக கண்டாள் அவள்.

'ஒருமுறையா நிச்சயமா மன்னிக்கிறேன், ஆனா அதுக்கு முன்னாடி ஒரு கண்டிஷன்' கை கட்டி சமையல் திட்டில் வாகாக சாய்ந்து நின்றாள். முகம் பளிச்சிட்டவன் 'எந்த கண்டிஷனா இருந்தாலும் சொல்லு நான் ஒத்து வரேன்' என்றான் விபரீதம் அறியாமல் அவள் மன்னித்தால் போதும் என்று.

'பெருசா ஒன்னும் இல்ல, ஒரு ஆடம்பரமான செவெந்த் ஸ்டார் ஹோட்டல்ல ரூம் புக் பண்ணனும்' என்றதும் 'அதுக்கென்ன டி டெல்லிலயே இருக்க பெரிய ஹோட்டலா பாத்து புக் பண்ணிட்டா போச்சி, நீ நான் பாப்பா ஜாலியா எத்தனை நாள் வேணும்னாலும் தங்கிட்டு வரலாம்' உற்சாகம் பொங்க சொல்லிட 'நான் நம்ம மூணு பேருக்கும் தான்னு சொல்லவே இல்லையே' அடுத்து அவள் சொன்ன வார்த்தையில் முகம் கருத்து கை முஷ்டி இறுக நின்றான்.

என்ன சார் அமைதியாகிடீங்க முடியாதா? சரி விடுங்க நான் அவரையே கிடைக்கிற ஹோட்டல்ல புக் பண்ண சொல்லிக்கிறேன். உங்களுக்கு எதுக்கு வீனா சிரமம் ஆமா நீங்க எப்ப என் வீட்டை விட்டு போறதா உத்தேசம். தன் வேலையில் கவனமாகி உருளைக்கிழங்கை வறுக்க வேண்டி வட்டவட்டமாக வெட்டினாள்.

மோகி நீ என்னை பழி வாங்குறதா நினைச்சி உன்ன நீயே அசிங்கப்படுத்திக்காத டி. எனக்கு தெரியும் என் மோகி என்னைக்கும் வழி தவறி நடக்க மாட்டா அப்டி ஒருசூழ்நிலை ஏற்பட்டா உன்ன நீயே அழிச்சிக்க கூட தயங்கமாட்ட, வேற ஏதாவது வழில என்ன காயப்படுத்தி தண்டனை குடு டி ப்ளீஸ் இப்டிலாம் பேசாத கஷ்டமா இருக்கு மோகிஇ.. வேதனையாக சொல்ல அப்டியா என்பது போல் ஏலனம் அவள் கண்களில்.

அதான் ஊரே என் உடம்பை பாத்து சந்தி சிரிச்சி போச்சே டா. அதுக்கு மேலயும் உத்தமியா வாழ்ந்து யாருக்கு என்ன பயன். நான் நிம்மதியா காசு பணத்தோட வாழ வேண்டாமா? என் குழந்தைய வாழ வைக்க வேண்டாமா? ப்ரைவேட் ஸ்கூல் சம்பாத்தியம் எந்த மூலைக்கு வரும்? கால் முடங்கி பிறந்த குழந்தைக்கு ட்ரீட்மெண்ட்க்கு பணத்துக்கு எங்கே போவேன்? நீ பழி வெறி பிடிச்சி கண்ட பொண்ணுங்க கூட படுத்து பாதை மாறின மாதிரி உன்னால பாதிக்கப்பட்ட நானும் என் பண தேவைக்கு மாறிக்கிட்டேன் அவ்வளவு தானே.

வயித்துல குழந்தைய வச்சிக்கிட்டு முதல்ல எப்டினு தயங்கி யோசிச்சேன் அப்புறம் ஒரு வயசான பணக்காரர், என்னை திருப்தி படுத்து நீ எவ்ளோ கேக்குறியோ தரேன்னு சொன்னாரு கை பிள்ளைய வச்சிக்கிட்டு எப்டி எங்கே வேலைக்கு போக? தட்டி கேக்க வேண்டிய என் அப்பாவும் உயிரோட இல்ல அதான் துணிஞ்சி பணத்துக்காக அந்த கிழம் கூப்பிடற இடத்துக்கு போனேன். முதல்ல அருவருப்பா தோணுச்சு ஆனா அருவருப்ப பாத்தா வேலைக்காகுமா நீ எனக்கு சொல்லிக் கொடுத்த கட்டில் பாடம் சரியான நேரத்துக்கு கை கொடுத்துச்சி. என்னால முடிஞ்சதை செஞ்சேன் கை மேல பணம் வாங்க கசக்கவா செய்யும்.

அதுல இருந்து வசதியானவனா இருந்தா மட்டும் வீக் எண்டுல போறது வழக்கம். லோக்கல் ஹோட்டல்ஸ் போய் ஒரே போர் கட்டில் சரிஇல்ல அதான் உன்கிட்ட ஹைக்குவாலிட்டி ஹோட்டலா புக் பண்ண சொல்லி கேட்டேன், நீயும் நல்ல வசதியானவன் கூட வச்சிக்கிட்டா லாபம் தானே 'அசதிக்கு இல்லனாலும் வசதிக்கு வச்சிக்கலாம்' அப்டியே நான் ரூம் போயிட்டு வர வரைக்கும் குழந்தைய பாத்துக்கவாது உன்ன யூஸ் பண்ணிகலாம்னு பாத்தேன். முடியாதுனு சொல்லும் போது நான் என்ன பண்ணட்டும் அவங்க புக் பண்ற இடத்துக்கே போக வேண்டியது தான். சலிப்பாக கூறி முடித்தவளின் கொத்து முடியை கையில் பிடித்து, ஏய்ய்.. என்ற உருமளோடு கன்னம் கன்னமாக அறைந்த அறையில் உதடு கிழிந்து குருதி வடிந்தது.

அடித்த அடியில் தரையில் விழுந்து கிடந்தவளை சிவந்த விழிகளால் அற்பமாக கண்டவனின் கோவம் அவளை கொல்லும் அளவிற்கு எல்லையை கடக்க எதுவும் பேசாமல் விருவிருவென வீட்டை விட்டு வெளியேறி விட்டான்.

அவன் சென்ற திசையை எத்தனை நேரம் கண்ணில் தேங்கிய கண்ணீரோடு வெறித்தாளோ, நேரம் ஆவதை உணர்ந்து தக்காளி பழமாக வீங்கிய முகத்தை குளிர்நீரில்க் கழுவிக் கொண்டு விட்ட வேலையை தொடங்கியவளின் கண்கள் விடாமல் நீரை சுரந்தன.

என்ன மச்சா மோகி உன்கிட்ட சண்டை போட்டாளா? லிட்டர் கணக்கில் சரக்கடித்தும் வந்ததில் இருந்து முகம் கணியாமல் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கும் விஷ்வாவை அமைதியாக கண்ட விதுரன் நீண்ட நேரம் பின்னே வாய் திறந்தான்.

அகல விரித்த உள்ளங்கை கொண்டு மௌனமாக முகத்தை மூடிக் கொண்டவன் ஆழ்ந்த மூச்சை மட்டும் பதிலாக வெளிவிட்டான்.

ஓகே.. ரைட்டு. பாவம் டா அந்த பொண்ணு பாத்ததும் என்னை மன்னிச்சி ஏத்துக்கோனா எப்டிடா. கொஞ்ச நாள் ஆகும் டா அவ மனசு மாற. அதுவரைக்கும் கொஞ்சம் விட்டு பிடி. எனக்கு தெரிஞ்சி மோகி மட்டும் தனியா இருந்திருந்தா இந்நேரம் உன்ன அடிச்சி விரட்டி இருப்பா, குழந்தை இருக்கவே தான் அது மனசுல எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டுடக் கூடாதுனு அமைதியா இருக்கானு தோணுது. குழந்தையையாவது உன்கிட்ட விட்டு வச்சி இருக்காளேனு இப்போதைக்கு அதை நினைச்சி சந்தோஷப் பட்டுக்கோடா விஷ்வா என்ற விதுரனை முறைப்போடு பார்க்கவும் புரியாமல் விழித்தான் அவன்.

'என்ன டா எது சொன்னாலும் முறைக்கிற. இப்டி முறைச்சா எப்டி அந்த பொண்ணு உன்கூட வாழுவா, இல்ல இல்ல இது சரி வராது நீ என்கூடவே கடைசி வரைக்கும் நண்பனாவே இருந்திடு உனக்கும் வயசாகிடுச்சு நான் மோகிக்கு வேற ஒரு நல்ல சாப்ஃட் மாப்பிளையா அவ வயசுக்கு ஏத்த சின்ன பையனா பாத்து கட்டி வச்சிடறேன்' விதுரன் வேறு அவனது மனநிலை புரியாமல் வார்த்தையை விட்ட மறுநொடி சுவற்றில் இடைவிடாமல் அடித்து நொறுக்கப்பட்ட மது போத்தில்கள் சிதறும் சப்தம் மட்டுமே அவ்வறையை நிறைத்து விஷ்வாவின் கோவத்தை பறைசாற்றின.

'டேய் விதுரா இதுக்கு மேல ஏதாவது பேசின இருக்க ஆத்திரத்துல நண்பன்னு பாக்க மாட்டேன் குரவலைய கடிச்சி துப்பிடுவேன், அவதான் என் உயிர எடுக்குறானு இங்க வந்தா அவளுக்கு மேல நீயும் டென்ஷன் பண்ணிக்கிட்டு. என்ன சொன்ன எனக்கு வயசாச்சா உனக்கும் தான் டா எருமகடா வயசாச்சி கிழவா கிழவா..' விதுரன் வயிற்றில் ஏறி அமர்ந்து குத்து விட்டவனை புரட்டிப் போட்டு அவன் வயிற்றில் அமர்ந்து 'பொண்டாட்டிய சமாதானப் படுத்த வக்கில்லாத சிடுமூஞ்சி கிழவன் டா நீ வந்துட்டான் என் வயச பத்தி பேச' இவனும் குத்த.

'டேய் கிழவன் சொல்லாத டா' இன்னமுறை அவன்.

'அப்டிதான்டா சொல்லுவேன், பாரு உனக்கு வெள்ளை முடி இருக்கு' அடுத்து இவன்.

'வெள்ளை முடிய கலரிங் பண்ணி வச்சிக்கிட்டு மிதப்புல திரியாதே டா. நான் சோகத்துல இருந்ததால என்னை என்னால மெயின்டெயின் பண்ண முடியல. இனி மாறுவேன் டா ஆனா பாரு நான் எப்டி இருந்தாலும் எனக்கு என் மோகி இருக்கா உன் கிழ மூஞ்சிக்கு எவடா இருக்கா' அவன் வயிற்றில் குத்து.

'என்னவோ உன் பொண்டாட்டி உன்ன ஏத்துக்கிட்ட மாதிரி ஓவரா சீன் போடாத டா. அந்த புள்ளைய பழி வாங்க நினச்ச உனக்கே கடவுள் பரிதாபபடும் போது எனக்கு பட மாட்டாரா. எனக்கான பொண்ண பாத்து ஒரு வாரம் ஆச்சி' விஷ்வாவின் வயிற்றில் அமர்ந்து வெட்கப்பட்டு நகம் கடித்தவனை ஒரு மார்க்கமாக பார்த்து 'ச்சீ தள்ளு' கீழே தட்டி விட்டான் விஷ்வா.

நினச்சேன் டா. இத்தனை நாளும் இல்லாம உன் கிழ மூஞ்சி பளிச்சினு இருக்கேனு, ஆனா திடிர்னு யாரு டா அந்த பொண்ணு முரட்டு சிங்கிள வசியம் பண்ணது. சிறுவர்கள் சண்டை அத்தோடு முடிவடைந்து விட உருண்டு பிரண்டு அடித்து மாய்த்துக் கொண்டதில் இருவருக்கும் மூச்சி வாங்கியது.

எல்லாம் உனக்கு தெரிஞ்ச பொண்ணு தான் மச்சி. அப்போதும் வெட்கம் மாறவில்லை அவன் முகத்தில்.

யாராக இருக்கும் முன்பே அவன் கணித்து வைத்திருந்தான் தான் ஆனாலும் அவள் தானா என்ற சந்தேகம் உள்ளது. ஓரளவு கண்மணியின் கடந்த காலத்தைப் பற்றி அறிந்து வைத்திருந்தவன், ஏன் மச்சா நீ அந்த பொண்ணு கண்மணிய சொல்லையே..

ப்ச்.. அவளை தான் டா சொன்னேன் என்றதும் புருவ முடிச்சிகள் விஷ்வரூபன் முகத்தில்.

என்ன மச்சா யோசனை. நண்பனின் முக மாற்றத்தில் துணுக்குற்றான் விதுரன்.

'இல்ல டா அந்த பொண்ணு காலேஜ் படிக்கும் போதே ஒரு பையன லவ் பண்ணிட்டு இருந்ததா மோகி அடிக்கடி சொல்லுவா. ஆனா இப்ப அவ தனியா இருக்கா கல்யாணம் வேணாம்னு சொல்றத பாத்தா லவ் பிரேக் அப் ஆகிடுச்சா என்னனு தெரியலயே. நேத்து நைட் மோகி கண்மணி கூட பேசிட்டு இருக்கும் போது அவளுக்கு கல்யாணப் பேச்சி அடிபட்டுச்சு, அநேகமா நாளைக்கு தான் கல்யாணம்னு நினைக்கறேன்' என்றதும் விதுரனின் குட்டி இதயம் அடிப்பட்டு போனது.

'இதுக்கு தான் நம்ம போன் பண்ண போதும் அவ்ளோ கோவமா கத்தினாளா என நினைத்தவனுக்கு, ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது கண்மணிக்கு இத்திருமணத்தில் பிடித்தம் இல்லை என்று. காதல் விவகாரம் என்னவோ ஆனால் இப்போது அவளுக்கு காதலன் இல்லை. கண்மணி தனக்கு கிடைக்கிறாளோ இல்லையோ அவளுக்கு பிடித்தம் இல்லாததை நடத்த விடக் கூடாது என மனதில் உறுதி பூண்டு விட்டான்.

மச்சா. அவ யாரை வேணாலும் லவ் பண்ணி இருக்கட்டும் நான் எப்பவும் சொல்றது தான் உண்மை காதலா இருந்தா கண்மணி அவ காதலுக்காக காத்திருக்கட்டும் அதுல நான் தலையிட மாட்டேன். ஆனா என் காதல் மாதிரி அவளுக்கும் ஏதாவது கசப்பான கடந்த காலம் இருந்தா மறந்துட்டு என்னை ஏத்துக்கிட்டு என்கூட வாழ விருப்பப்பட்டா நானும் அவளை கடைசி வரை என் நெஞ்சில தாங்க தயார் டா. இந்த கல்யாணம் நிச்சயம் அவளுக்கு பிடிச்சி நடக்க போறது இல்ல, அவ அண்ணங்காரன் தான் வில்லங்கம் பண்ணி இருப்பான் சோ நம்ம நாளைக்கு போயிட்டு நிறுத்திடலாம் மச்சி.

பெருந்தன்மையோடு அவன் சகஜமாக சொல்வது போல் இருந்தாலும் 'எப்படியாவது கண்மணி தனக்கு கிடைத்தே ஆக வேண்டும்' என்ற உறுதியோடு உள்ளுக்குள் அவன் மனம் அவளுக்காக கலங்கி தவிப்பதை விஷ்வரூபன் அறியாமல் இல்லை.

கண்மணி ரொம்ப நல்ல பொண்ணு மச்சி அவ உன் வாழ்க்கைல வந்தா உன் வாழ்க்கையும் சேர்த்து அவ வாழ்க்கையும் சிறப்பா இருக்கும். கவலை படாதே என் நண்பன் ஆசைப்பட்டத நிறைவேத்த வேண்டியது என் பொறுப்பு தீர்க்கமாக உரைத்த விஷ்வா விதுரனை கட்டிக் கொண்டான்.

ஆமா நீ ஏன் டா வந்ததுல இருந்து டென்ஷனா இருந்த அதை முதல்ல சொல்லு விட்டதில் இருந்து விதுரன் தொடங்கினான்.

அப்படி கேட்டதும் இத்தனை நேரமும் சிறுவனாக நண்பனிடம் அடித்துப் பிடித்து விளையாடிய முகம் மாறி இறுக்கமானவனாக, எல்லாம் அந்த மோகியால தான் டா வீட்டுக்கு போயிட்டு நிதானமா அவளை கவனிக்கிறேன் என்றவன் இருட்டிய வானம் கண்டு நண்பனிடம் கூறி விட்டு மோகியின் வீட்டுக்கு விரைந்தான் குழந்தை தன்னை தேடுவாளே என்ற பதைபதைப்போடு.

தொடரும்.
 

Author: Indhu Novels
Article Title: அத்தியாயம் 41
Source URL: Indhu Novels-https://indhunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top